நேற்று சத்யம் (சாந்தம்) திரையரங்கில் பசங்க படம் பார்த்தேன். அழகி, பள்ளிக்கூடம், பூ போன்ற படங்களின் வரிசையில் இதுவும் ஒரு படமோ என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஒரு விளம்பரத்தில் "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களின் கனவு காணுங்கள் என்ற வாசகம் போடப்பட்டிருந்தது பத்திரிகை பேட்டி ஒன்றிலும் இயக்குநர் பாண்டிராஜ் "இது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் என்று சொல்லியிருந்தார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் சொந்த தயாரிப்பு என்பதாலும் இசையமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அடுத்த படம் என்பதாலும் (எனது குடியிருப்பு பகுதியில் மின் வெட்டு காரணமாகவும் அலுவலக விடுமுறை என்பதாலும் ) அதிக எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனேன்.
அரசு பள்ளியில் பயின்ற ஒவ்வொரு மாணவ மாணவியையும் இத்திரைப்படம் வெகுவாக கவரும் . மாணவர்களுக்கான படமாக மட்டுமின்றி பெற்றோருக்கும் இதுவொரு சிறந்த பாடம் என்று சொன்னால் அது மிகையன்று. யதார்த்தமான குடும்ப சூழல், பாத்திரப்படைப்பு , வசனம், இயக்கம், இசை , தொய்வில்லாத திரைக்கதை என எத்தனை பாராட்டினாலும் தகும்.
சிறந்த தயாரிப்பாளருக்கான விருதினையும் சிறந்த இயக்கம் சிறந்த படம் என எத்தனை விருது கொடுத்தாலும் தகும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக ஒரு பாடத்தில் மூன்று தரப்பு கதையை இணைத்து அற்புதம் நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு கோடானு கோடி நன்றிகள்.
Child development எனது உளவியல் பாடப்பகுதியில் ஓன்று . ஒரு தனி மனிதனின் சிந்தனை ஒரு நேர கோட்டில் செல்ல வேண்டுமாயின் குடும்பம் முதலாவதாகவும் சுற்றமும் நட்பும் என்கிற பிற சமூக உறவுகள் அதற்க்கு வலுவூட்டுவதாகவும் இருக்க வேண்டும் .
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்பது கணவன் மனைவி உறவுக்குமட்டுமல்ல ஒவ்வொரு உறவுக்கும் அதுவே அடிப்படைத்தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் போது நிச்சயம் இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உலகின் மிகப்பெரிய மனித வள நாடக திகழும் என்பதில் ஐய்யமில்லை .
பசங்க திரைக்குழுவிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.
பசங்க சிறந்த தமிழ்படம்